​​இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் அயலான். இந்த படத்தை KJR நிறுவனம் தயாரித்திருக்கிறது. அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அயலான் படத்தில் வரக்கூடிய ஏலியன் அயலானுக்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார்.

பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு காத்திருக்கும் அயலான் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களுக்காக ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.

2018 சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக 24 AM நிறுவனம் அயலான் படத்தை தயாரித்து வந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட்டில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக 24 AM நிறுவனம் படத்திலிருந்து விலகியது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, KJR நிறுவனம் இந்த படத்தின் தயாரிப்பு உரிமைகளை வாங்கி, அதன்பிறகு படத்தை தயாரித்தது.

தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து விலகிய பிறகு 50 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது. அந்த 50 நாட்களுக்கான படப்பிடிப்பை எடுப்பதற்கு மூன்று வருடம் ஆகியதாக இயக்குனர் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டு ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அயலான் படத்தை தயாரிக்க ஒப்பந்தமான 24 AM நிறுவனம் TSR நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்று இருந்தது. தயாரிப்பு கைமாறிய பிறகு KJR ஸ்டுடியோஸ் இந்த கடனை அடைக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பெற்ற 10 கோடி கடனில், 3 கோடி மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் TSR ஃபிலிம்ஸ் நிறுவனம் மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து அயலான் படம் நான்கு வாரங்களுக்கு வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அயலான் படம் மட்டுமல்லாது KJR நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாகவிருந்த ஆலம்பனா திரைப்படத்தின் ரிலீஸையும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இந்த புதிய படத்தில், வைபவ், பார்வதி நாயர், யோகி பாபு, ஆனந்தராஜ் என பலர் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.