இந்தியா: தமிழ்நாடு 

திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதியை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர் பேசியதாவது:

கருணாநிதியும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஓய்வறியாமல் உழைக்கக்கூடிய தலைவர்கள். அவர்களுடனேயே நான் பயணித்திருக்கிறேன். எனக்கு தெரியும். இப்போது உதயநிதியை நான் பார்க்கிறேன். அவர்கள் இரண்டு பேரையும் இவர் தூக்கி சாப்பிட்டுவிடுவார். ரொம்ப ரொம்ப ரொம்ப துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கிறார் உதயநிதி. நான் உதயநிதியையும் பார்க்கிறேன்; அவருடைய பணிகளையும் பார்க்கிறேன்.

மூத்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நாங்கள் இன்று இருப்போம் நாளைக்கு இருக்க மாட்டோம். அது வேறு விடயம். ஆனால், இந்த இயக்கம் என்றைக்கும் இருக்க வேண்டும். அதனால் இந்த இயக்கத்துக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தாங்கக்கூடிய அளவுக்கு ஒரு தலைமை வர வேண்டும். அப்படி ஒரு தலைமை அடுத்த தலைமுறைக்கு வரும் என்றால், முதல் ஆளாக சென்று அவரை தோளில் சுமந்து செல்ல தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நமக்கு கட்சி தான் முதன்மை. மற்ற அனைத்துமே பிறகு தான். இதுதான் கருணாநிதி எனக்கு கற்றுக்கொடுத்த பாடம். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.