ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள தலைவர் 170 படத்தின் சூட்டிங் இன்று முதல் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் மஞ்சுவாரியர் என இரு மலையாள நடிகர்கள் நடித்து வரும் நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளை யானை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஹையட் ரெசிடென்சி ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் கெத்தாக உள்ளே நுழையும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இன்று காலை முதல் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மிகவும் வலிமையான திரைக்கதையை ஞானவேல் உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் தலைவர் 170 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.