இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமநாதபுரம் தேவக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது...

மணமக்கள் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தும் அடிமையாக இருக்காமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல், எடப்பாடி பழனிசாமியா? ஓ பன்னீர் செல்வமா? என குழாயடி சண்டை போல் இல்லாமல், மணக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்து சுயமரியாதையுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகளின் திருமண விழாக்களிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதன்பிறகு , குன்றக்குடி மடத்திற்குச் சென்று பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இதைத்தொடர்ந்து குன்றக்குடியில் உள்ள திமுக நிர்வாகி இல்ல மணவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு பவித்ரன், கிருஷ்ணவேணி ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிற்கே சிறந்த மாடலாக இந்த திராவிட மாடலை நமது முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அதுபோல மணமக்கள் உற்றார் உறவினர்களுக்கு ஒரு நல்ல மணமக்களாக, திராவிட மாடல் அரசு மாதிரி ஒரு நல்ல மாடலாக மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.