வெலிங்டன் பகுதியில் மூளைக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெலிங்டன் பகுதியில் பதிவான முதல் மரணம் எனவும் 2018 க்குப் பிறகு இது மூன்றாவது மரணம் எனவும் கூறப்படுகிறது.
Health New Zealand இறந்த நபரின் விவரங்களை வெளியிடாது, ஆனால் நோயாளியுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய பொது சுகாதார சேவைக்கான Health New Zealand மருத்துவ அதிகாரி டாக்டர் கிரேக் தோர்ன்லி, பொதுவாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் இந்த நோயின் வழக்குகள் அதிகரிப்பதால், சமூகத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய்க்காரணிகளினால் இந்நோய் ஏற்படுகிறது.
இந்த நோயின் பொதுவான அறிகுறிகளில் அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல், மூளை மற்றும் முதுகுத் தண்டின் புறணியின் வீக்கம், கை கால்கள் முடங்கிப் போதல் மற்றும் மூட்டுவலி ஆகியவை அடங்கும்.
இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இந்த நோய் வேகமாக பாதிக்கும்.
மூளைக்காய்ச்சல் பி தடுப்பூசி 3 மாதங்கள், 5 மாதங்கள் மற்றும் 12 மாதங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 31 ஆகஸ்ட் 2025 வரை இலவச தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
13 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கும் 2024 பெப்ரவரி மாதம் வரை தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.