நியூசிலாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்த ஜசிந்தா ஆர்டென் அரசு இல்லத்தில் முறைப்படி இன்று தனது ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து, பதவி விலகல் கடிதமும் அளித்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஹிப்கின்ஸ் மற்றும் துணை பிரதமர் கார்மெல் செபுலோனி ஆகியோர் காலை 11.20 மணியளவில் அரசு இல்லத்திற்கு வருகை தந்தனர்.

கிறிஸ் ஹிப்கின்ஸ் முறைப்படி 41-வது பிரதமராக இன்று காலை பதவியேற்று கொண்டார்.

அதன்பின் அவர் கூறும்போது, தனது அமைச்சரவையில், பணவீக்க பெருந்தொற்று விசயங்களை எதிர்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமுடன் கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிப்கின்ஸ், 2020-ம் ஆண்டு நவம்பரில் கொரோனா தடுப்புக்கான மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் காவல், கல்வி மற்றும் பொது சேவை ஆகிய துறைகளின் மந்திரியாகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.