கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் படத்தின் உண்மை கதாநாயகன் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தான் மிகவும் வறுமையில் இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளுக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்திருந்தார்.

இதனிடையே, பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித் தருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறிய நிதியை அவரது வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக  ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய   மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார்.

அத்துடன் பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும் ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.