நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து நீலாங்கரை பொலிஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான பொலிஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.

நீண்டநேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி எண்ணை  விசாரித்தபோது, விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் என தெரியவந்தது.

அந்த வாலிபரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவர், ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அவரது வீட்டுக்கும், மேலும் நடிகர்கள் அஜித்குமார், சரத்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளதுடன், நடிர் விஜய் வீட்டுக்கு தற்போது 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.