இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ் மரணம் அடைந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான தகவல் என இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மன்னர் 3ஆம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ரஷ்ய ஊடகங்களில் நேற்றையதினம் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தோடு ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் பரபரப்பான செய்தியாக மாறியிருந்தது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் பரப்பிய ரஷ்ய ஊடகங்கள், மன்னர் சார்லஸ் குறித்த புகைப்படங்களையும் இணைத்து செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது. இதனடிப்படையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் ஒரு வதந்தி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார்'' என கூறியுள்ளது.