பட்டினியின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சூடானின் சண்டையிடும் பிரிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏறக்குறைய ஐந்து மில்லியன் சூடான் மக்கள் வரவிருக்கும் மாதங்களில் ஆபத்தான உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்றே ஐ.நா எச்சரித்துள்ளது.

சூடானில் கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தளபதி Abdel Fattah al-Burhan மற்றும் முன்னாள் தளபதி Mohamed Hamdan Daglo ஆகியோரின் படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி போர் நீடித்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் முடங்கியது. போர் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 18 மில்லியன் சூடான் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 730,000 சூடான் குழந்தைகள், தார்பூரில் மட்டும் 240,000 க்கும் அதிகமானோர் உட்பட கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் சூடான் துறைமுகத்தில் போதுமான உதவி இருப்புக்கள் உள்ளதாகவும், அங்கு இருந்து தேவைப்படும் மக்களுக்கு உதவி எடுத்துச் செல்வதே சிக்கலான விடயம் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் 14 மில்லியன் சிறார்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும், நான்கு மில்லியன் சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.