இந்தியா: தமிழ்நாடு

மக்களவை தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் பிரதமர் ரோட் ஷோ நிறைவு பெறும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது...

மக்களவைத் தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறை. பிரதமர் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கூட்டணி குறித்த முடிவுகளும் அடுத்த கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும். காவல் துறை அனுமதியோடு பிரதமர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தீர்ப்பில் பிரதமரை பார்ப்பதற்கு ஜனநாயக ரீதியாக மக்களுக்கு உரிமை உள்ளது என கூறப்பட்டுள்ளது. 10 மீட்டர் தொலைவில் மக்கள், பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆர்.எஸ்.புரத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்த இருகிறார்.” என அண்ணாமலை கூறினார்.