இந்தியா: தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு மற்றும் தேர்தல் விளம்பர குழு ஆகிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச் செல்வன் ஆகிய 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு நேற்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று சேலம் மண்டலத்தில் அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாயிமியின் வீட்டிற்கு சென்ற குழுவினர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் 9 மண்டலங்களில் மாநில நலன் சார்ந்த உரிமைகள், திமுகவால் தாரைவார்க்கப்பட்ட உரிமைகளை மீட்பது குறித்து கேட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை முறைப்படி பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றார்.

மேலும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினரே இல்லை, சம்பந்தம் இல்லாமல் அவர் பேசுவதை உளறல் பிதற்றல் என்றுதான் சொல்ல வேண்டும் எனவும் ஜெயக்குமார் விமர்சித்தார். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், திமுக, பாஜகவை தவிர எதிரிகள் கிடையாது என்றும் எல்லா கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது திமுக கைவந்த கலை என்றும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.