போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதுவரை நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பணியாற்றும்போதுதான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் விக்கி தற்போது இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கண்டிப்பாக நயன்தாரா நடிப்பார் என்று கருதப்பட்டது. அதேசமயம் ஹீரோயினாக நடிக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் படத்தில் நயன்தாரா என்ன ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்கவிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கணவர் இயக்கும் படத்தில் நயன் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அக்காவாக நடிக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஏற்கனவே அவர் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.