நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா.

இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. 1965 காலகட்டத்தில் தமிழகத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு புறநானூறு படத்தின் கதைக்களத்தை சுதா கொங்கரா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பின்போதே உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும் இந்த முறை பயோ பிக் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் இசையமைப்பாளராக அவரது 100வது படம் என்பதால் மிகச்சிறந்த இசையை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மீனாட்சி சினிமாஸ் இணைந்து இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா இந்தப் படத்தின்மூலம் மீண்டும் நேரடி தமிழ் படத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளதும் ரசிகர்களிடையே அதிகமான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சூர்யா அரசியல் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னுடைய உடலை மெருகேற்றும் வேலைகளில் சூர்யா ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ஆயுத எழுத்து படத்தின் கதையை ஒத்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.