இலங்கை

முல்லைத்தீவு - குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வுபிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம்செய்யவேண்டாம் என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திரட்டுமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சாத்தியம் என்ற இந்திய புலனாய்வு பிரிவினரின் எச்சரிக்கையை தொடர்ந்தே உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

அத்துடன் குருந்தூர்ஆலய பகுதியினை உரிமை கொண்டாடுவதற்காக பௌத்த இந்து உணர்வுகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன எனவும் இந்த வன்முறைகள் 2019 தேர்தலிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விட மோசமானவையாக காணப்படலாம் எனவும் இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.