நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தென்காசி, மதுரை பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் தனுஷ் திடீரென மும்பை பறந்துவிட்டார்.

தனுஷ் திடீரென மும்பை சென்றது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ள.

தனுஷை பாலிவுட் பக்கம் அழைத்துச் சென்றவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆனந்த் எல் ராய். ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா என்ற திரைப்படம் மூலம் இந்தியிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் தனுஷ். ராஞ்சனா தமிழில் அம்பிகாபதி என்ற டைட்டிலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

2013ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ராஞ்சனா படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்ததால், தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்தது.

அதன்படி, இக்கூட்டணியில் உருவான அத்ரங்கி ரே திரைப்படம், 2021ம் ஆண்டு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஓடிடியில் வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகானும் முக்கியமான ரோலில் அக்‌ஷய்குமாரும் நடித்திருந்தனர்.

அதேநேரம், ராஞ்சனா, அத்ரங்கி ரே என இரண்டு படங்களுமே காதல் பின்னணியில் ரொமாண்டிக் ஜானரில் உருவாகின. இதனையடுத்து மீண்டும் ஒரு படத்தில் இணையலாம் என தனுஷும் ஆனந்த் எல் ராய்யும் முடிவெடுத்துள்ளனர்.

அதற்கான ப்ரோமோ ஷூட் மும்பையில் நடைபெற்றுள்ளது.

அதில் கலந்துகொள்ளவே தனுஷ் மும்பை சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தனுஷ் - ஆனந்த் எல் ராய் மீண்டும் இணையும் இந்த படம் இந்தமுறை ரொமான்ஸ் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம்.

ப்ரோமோ ஷூட் முடிந்துவிட்டதால் விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.