சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடந்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி" நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டு, விரைவில் படமாக்கப்பட உள்ள அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது...

கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் 'ரகசியம் பரம ரகசியம்' நாடகம் பார்க்க சென்றேன். அரை மணி நேரம் காத்திருந்தும் நாடகத்தை பார்க்க உள்ளே விடவில்லை.

காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதனைத்தான் மகா காலம் என்று சொல்வார்கள்.ஆனால் இன்று ஐம்பதாவது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் விளையாட்டுதான்.

ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் ஒய்.ஜி.பி நாடகக் குழுவின் இருந்து வந்தவர்கள்.

பாதுகாப்பும் கண்ணியமும் மிக்க நாடக குழுவினராக திகழ்கிறார்கள். இந்த நாடகத்தை படமாக எடுக்கும் போது நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒய் ஜி மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாது.

எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஒய்ஜி மகேந்திரன் தான். நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான். நான் கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன்.

நான் நடத்துனராக இருந்தபோது எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது.

காலையிலேயே பாயா, ஆப்பம் , சிக்கன் 65 சாப்பிடுவேன்.

சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது.

இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா.

என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார். நடத்துனராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன்.

சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.