இங்கிலாந்தின் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள செயின்ட் ஹெலினாவில்தான் பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் 1821ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்டு உயிரிழந்தார்.

அதே இடத்தில்தான் ஜொனாதன் என்ற ராட்சத ஆமையும் தற்போது வசித்து வருகிறது.

ஜொனாதன், 1832ஆம் ஆண்டு பிறந்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அதன் பின் 50 வருடங்கள் கழித்துதான் கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்ஸில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஜொனாதன் தற்போது தனது 190ஆவது பிறந்த ஆண்டை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம், தற்போது பூமியில் வசிக்கும் மிகவும் வயதான உயிரினம் ஜொனாதன் தான். 

செயின் ஹெலினா நகரின் கவர்னர் குடியிருப்பில் உள்ள தோட்டத்தில் தனது ஓய்வு காலத்தை மிகவும் ரம்மியமாக கழித்து வருகிறார் ஜொனாதன்.

ஜொனாதன் தனது வாழ்வின் அனைத்து சுப காரியங்களையும் அங்கு கொண்டாடி வருகிறார்.

அவர் குறித்து உருவான சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவும் அங்குதான் நடைபெற்றது. 

கேரட், கீரை, வெள்ளரி, ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகியவை ஜொனாதனுக்கு மிகவும் பிடித்தமானவை என கூறும் அதன் பராமரிப்பாளர்கள், மேற்கூறியவற்றை சேர்த்துதான் ஜொனாதனின் பிறந்தநாள் கேக்கையும் உருவாக்கியுள்ளனர். மேலும், ஜொனாதானுக்கு பிடித்த மற்றொன்றும் அங்கு இருக்கிறது. அது வேறு யாருமல்ல, 50 வயதே ஆன எம்மா என்ற பெண் ஆமைதான். 

இதுகுறித்து கவர்னர் லிசா பிளிப்ஸ் கூறுகையில்,"இத்தனை வயதிலும் ஜொனாதன் பெண்களை மிகவும் ரசிக்கிறார். அவர் எம்மாவுடன் தோட்டத்தில் மகிழ்ச்சியாக சுற்றுவதை நான் பலமுறை பார்த்துள்ளேன். 

ஏனென்றால், அவர் மீது எப்போதும் எனக்கு கண் இருந்துகொண்ட இருக்க வேண்டும். நான் கவர்னர் பொறுப்பை ஏற்றபோது இதுதான் என் வேலை என்று யாருமே கூறவில்லை" என நகைச்சுவையாக கூறினார். 

இந்தாண்டின் தொடக்கத்தில், உலகின் மிகப் பழமையான நிலத்தில் வாழும் விலங்கு என்ற கின்னஸ் உலக சாதனை பட்டத்தை ஜொனாதன் வென்றது. மிகவும் பழமையான ஆமை என்ற பட்டத்தை இம்மாதம் பெற்றிருக்கிறது.

ஜொனாதன் குறித்து, ஓய்வுபெற்ற விலங்கு மருத்துவரும், ஜொனாதனின் தற்போதைய முக்கிய பராமரிப்பாளருமான ஜோ ஹோலின்ஸ் கூறுகையில்,"1832ஆம் ஆண்டு ஜொனாதன் பிறந்தார் என்பதை நினைத்து பாருங்கள். அப்போது, ஜார்ஜியன் ஆட்சிக்காலம் இருந்தது. உலகம் எப்படி மாறிவிட்டது. 

உலகப்போர், பிரிட்டீஷ் பேரரசின் வீழ்ச்சி, எத்தனை கவர்னர்கள், மன்னர்கள், ராணிகளை ஜொனாதன் கடந்து வந்திருக்கிறார். இது மிகவும் அசாதரணமானது" என்றார். 

ஜொனாதன் இன்னும் பல ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக வாழ்வார் என நம்பும் அதே வேளையில், செயின்ட் ஹெலினா நகர அதிகாரிகள், அவரின் மரணத்திற்கு பின்னான இறுதி மரியாதை குறித்த திட்டங்களை ஏற்கனவே தயாரித்துள்ளனர். ஜொனாதனின் ஓடு பகுதியை வருங்கால தலைமுறையினரின் பார்வைக்காக பாதுகாத்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.