80 மற்றும் 90களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரேவதி.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இப்போதும் பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் காமெடி கலந்த கதாபாத்திரம் என நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்த ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார். 

அந்த வகையில் தற்போது ஹிந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படம் அடுத்த மாதம் 9ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ரேவதி ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் 3' படம் உருவாகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ள நிலையில் ரேவதி கதாபாத்திரம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகை ரேவதி ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் 'லவ்'. இப்படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணையவுள்ளதால் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.