கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான சதவீதத்தில், இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதென, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

'அந்த வகையில் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் தொற்றுவது 5.5 எனும் விளிம்பு நிலை சதவீதத்தைக் கடந்துவிட்டது' என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார். 

இந்த நேர்மறை சதவீதமானது, ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்தது. அதன்பின்னர் 4, 5 ஆகிய மட்டங்களை மிகவிரைவாகக் கடந்து, 5.5 சதவீதத்தில் உள்ளது எனத் தெரிவித்த அவர், இது அபாயகரமான நிலையாகும் என்றார். 

எவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை. குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவங்கொட, பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.

அண்மைய தொற்றுகள், மேற்படி இரு கொத்தணிகளுடனும் தொடர்புபட்டவை என்றும் துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.