இலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில்​ கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளது

இலங்கையில் அண்மைக்காலமாக கொவிட் வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கலாச்சார பன்முகதன்மையை கருத்தில் கொள்ளும்போது கொவிட் வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான கொள்கையொன்று அவசியம்.

ஆரம்ப கட்டத்தில் இருந்த தரவுகளை அடிப்படையாக வைத்து சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர், உடல்களை தகனம் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு அவற்றை கட்டாயமாக தகனம் செய்தே சிறந்தது என்ற அரசாங்கத்தின் முடிவு காரணமாக சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்களிடையே அமைதியின்மை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பலர் மருத்துவர்களை அணுகுவதை தவிர்க்கின்றனர்.

இதன் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பவர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், கடந்த 31ம் திகதி அனைத்துபிரிவு மருத்துவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் கொவிட் சுவாசம் மூலமாக மாத்திரம் பரவுகின்றது. ஏனைய வழிமுறைகள் மூலம் பரவியமை குறித்த தகவல்கள் இல்லை உயிரிழந்த ஒருவரின் உடலில் வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழாது பிரேதப் பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் மூலம் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானமைக்காக உயிரிழந்தவரின் உடலில் தொற்று உள்ளது என்ற முடிவிற்கு வரமுடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.