அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக தெரிகிறது.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கூறியதை அமெரிக்கா ஏற்கவில்லை.

இந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை.

இந்தநிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.  ஒரே மாதத்தில் வடகொரியா நடத்தும் 7‌ ஆவது சோதனை இதுவாகும்.

800 கி.மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை பறந்து கடலில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு  வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும் என கூறப்படுகிறது.