தென் சீனக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை தேடும் பணியில் பலநாடுகள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூஎஸ்எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட  அதிநவீன போர் விமானம்  எப்-35  தென் சீனக் கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தின் காணொளிகளும் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த விமானத்தின் மதிப்பு 10 கோடி அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ. 750 கோடி ஆகும்.

கடற்படை கேரியரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காணொளி ஜெட் வேகமாக கப்பலை நெருங்கி வருவதைக் காட்டுகிறது, அங்கு  திடீரென புகை தோன்றுகிறது.இந்த வீடியோஆன்லைனில் வெளிவந்த பிறகு, அவை உண்மையானவை என்பதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியது.

கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இந்த போர் விமானத்தை, சீனா மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும் என்று அமெரிக்கா போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கிறது.

இந்த போர் விமானம், பல்வேறு அதி நவீன இரகசிய சாதனங்களால் நிறைந்தது. அது விழுந்த இடம் சர்வதேச எல்லைக்குள் வருவதால் பலநாடுகளும் அதைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

யார் முதலில் அதைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

இத்தனை சிரமப்பட்டு அந்த போர் விமானத்தைக் கடலில் தேடக்காரணம் இந்த போர் விமானத்தின் பின்னிருக்கும் இரகசிய போர் தொழில்நுட்பங்கள்தான்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு..

* இந்த போர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, தன்னிடமுள்ள தரவுகளைப் பகிரும் வலையமைப்பைக் கொண்டது.

* தாழ்வாகப் பறந்து கண்காணிக்கும் திறன் கொண்ட, விமானம் தாங்கிக் கப்பலில் இருந்தே புறப்பட்டு அதிலேயே தரையிறங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் முதல் விமானம்.

* பெரிய இறக்கைகள், அருமையான தரையிறங்கும் அமசங்களை  கொண்டிருப்பதால், விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஏவும் முறையில் செலுத்த கச்சிதமாக ஏற்ற விமானம் இது.

* உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமான என்ஜினைக் கொண்டது. இந்த விமானம் மணிக்கு 1,200 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது.

* வெளியே இரு ஏவுகணைகள், உள்ளே நான்கு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.