இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை இடமாற்றம் செய்யும் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தீர்மானத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை இடமாற்றம் செய்வதற்கான மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  வாக்கெடுப்பெடுப்புக்கு விடப்பட்டது.  அதற்கமைய பெரும்பான்மையினரின் ஆதரவுடன் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

ஜகார்த்தா நகரில் நகரில் நிலவும் சனநெருக்கடி, 24 மணிநேர போக்குவரத்து நெரிசல், வளிமண்டல மாசு மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை போன்ற பிரச்சினைகளை கருத்திற்கொண்டு  தலைநகரை மாற்றுவதற்கான யோசனையை ஜனாதிபதி யோகோ விடோடோ பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியா, தென்கிழக்கு ஆசியாவில் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இந்தோனேசியாவில் 17,000 தீவுகள் உள்ளன.

அவற்றில் சுமத்ரா, சுலவேசி மற்றும் ஜாவா ஆகியவை முக்கிய தீவுகளாகும். கூடுதலாக, போர்னியோ மற்றும் நியூகினியா மாகாணங்களும் இந்தோனேசியாவுக்கு சொந்தமானவையாகும்.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேசியாவாகும். இந்தோனேசியாவில் 270 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். தற்போதைய தலைநகரான ஜகார்த்தா ஜாவா தீவில் அமைந்துள்ளது. ஜாவா இந்தோனேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவு மற்றும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய நகரம் ஜகார்த்தாவாகும்.

போர்னியோ தீவில் உள்ள கிளிமன்னாத் என்ற வனப்பகுதிக்கு தலைநகரை மாற்றுவதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், புதிய தலைநகருக்கு நுசந்தாரா என்று பெயரிடப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைநகரான நுசன்தாரா 32 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.