டோங்கோவில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது தன் நாயை காப்பாற்ற முயன்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று தீவு நாடான டோங்கோ நாட்டின் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் கரை பகுதியை சுனாமி அலைகள் தாக்கின.

மேலும், அதன் எதிரொலியாக பல நாடுகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. அதோடு அதன் அதிர்வுகளை பல நாடுகள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டன.

இந்நிலையில், ஆழிப்பேரலையில் இருந்து நாய்களை காப்பாற்ற முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் சகோதரர் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், 'என் சகோதரி ஏஞ்சலா குளோவர் மற்றும் அவரது கணவரும் கடந்த 2015 முதல் டோங்கோவில் வசித்து வருகின்றனர். என் தங்கையுடைய ஆசையே தெற்கு பசிபிக் பெருங்கடலை ஒட்டி வாழ வேண்டும் என்பது தான்.

அதற்கு எற்றார் போல அவர்கள் டோங்கோவியே வசித்தனர்.

அவர்கள் இருவருக்கும் விலங்குகளின் மீது அதீத நேசம் கொண்டவர்கள். அதோடு கணவன் மனைவி இருவரும் டோங்கோ விலங்குகள் நல சங்கமும் அமைத்து நடத்திவந்தனர்.

அதுமட்டுமில்லாமல் டோங்கோவில் எரிமலை வெடித்து சிதறியதை கூட படம் பிடித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பின் போது எந்த அசம்பவிதமும் நடக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே சுனாமி அலைகள் எழுந்துள்ளது. அப்போது ஏஞ்சலா அலையில் அடித்து செல்லப்பட்ட நாய்களை காக்க முயன்ற போது அவரும் அலைகளில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

ஏஞ்சலா உயிரிழந்த சம்பவம் எங்களுக்கு அவளது கணவர் சொல்லி அறிந்துக் கொண்டோம். இது விபத்து என்பது எங்களுக்கு புரிகிறது. அவள் தனது வாழ்நாளின் இறுதியில் அவளுக்கு பிடித்த இடத்தில் இருந்தாள் என்பது மட்டும் தான் எங்களுக்கு ஒரே ஆறுதல்' எனக் கூறியுள்ளார் அவரது சகோதரர் நிக் எலினி.