இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த நபரை மின்னல் தாக்கியது.

35 வயதான அந்த நபர் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்,  மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

இதனால் மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்தனர். எனினும், அவருடைய கைகள் தீயில் கருகின. பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரின் கையில் இருந்த வாக்கி-டாக்கி மின்னலை ஈர்த்ததாக கூறப்படுகிறது.

கையில் குடையை பிடித்துக் கொண்டு வெட்டவெளியில் மழையில் சென்றதால் தான் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.