விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த வேளாண் சட்டம் இரத்து மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய நிலையில்  வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப் போவதாகவும், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனிடையே இரத்து மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் இரத்து மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது.

மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படவிருக்கிறது.

பிரதமர் மோடி, சொன்னதை போலவே, முதல் நாளிலேயே வேளாண் சட்டம் ரத்து செய்யப்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.