வெள்ளனூர் அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தேங்கி நின்ற மழை நீரில் சிக்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை: தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உயிர்ச் சேதமும் ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலத்தில் பலத்த மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது.

இதனை அறியாமல் பாலத்தைப் பெண் மருத்துவர் ஒருவர் காரில் கடக்க முயன்றார். அப்போது காரின் சைலன்சருக்குள் தண்ணீர் புதுந்ததால் வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.மேலும் அவருடன் சென்ற அவரது மாமியாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த பெண் மருத்துவர், புதுக்கோட்டையில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றபோது, இந்த விபத்து ஏற்பட்டது.