இலங்கை

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்கள் குழுவுடன்  டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 08.10 மணியளவில் டெல் அவிவ் (Tel Aviv ) நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஜெருசலேம் சன்கர் விளையாட்டரங்கில் சுமார் இரண்டாயிரம் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வோன்று இடம்பெற்றுள்ளதோடு நிகழ்வு முடிவடைந்த பின்னர் தமது இல்லங்களுக்குச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே. இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தற்போதைய நிலைமை காரணமாக இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.