இலங்கை

இலங்கையில்  பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் 2022 வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடைய விடாமல் திட்டமிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது. இது போதுமானது அல்ல.

இன்னும் 05 முதல் 10 ஆண்டுகள் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும். நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைவீர்கள். அதற்கு உங்களை தயார்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இன்றைய பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலம் நவீன உலகத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கல்வியின் புதிய ஆயுதம். நாம் ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டும். அடுத்த 10-15 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். உலகத்துடன் இணைந்து நாம் இந்தப் பயணத்தில் செல்ல வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் நவீனமயமாக்கல் அவசியம்.

வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது. இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாகாணத்திலும் கல்விச் சபையை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவையும், அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்க வேண்டும்  என குறிப்பிட்டுள்ளார்.