இந்தியா: தமிழ்நாடு

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இனியாவது திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, போதை பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, திமுக நிர்வாகி ஜாபர்சாதிக் என்பவர்தான், சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது.

இந்த சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதை பொருளும், 876கிலோ கஞ்சாவும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக, திமுகஅரசு போதை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே இதற்கு காரணம்.

போதை பொருட்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா, அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப் போகிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.