தனது நகைக்கடை மற்றும் துணிக்கடை விளம்பர படங்களில் நடித்து வந்தார் சரவணன் அருள். இந்த விளம்பர படங்களில் முன்னணி கதாநாயகிகளுடன் இணைந்து நடித்து இளைஞர்கள் பலரையும் வெறுப்பேற்றினார். விளம்பர படங்களில் நடித்த சமயத்திலே அதிகம் ட்ரோல் செய்யப்பட நிலையில், தைரியமாக சினிமாவிலும் தடம் பதிக்க முடிவு செய்தார் லெஜண்ட் சரவணன்.

அதன்படி இவரின் முதல் படமான 'லெஜண்ட் சரவணன்' கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியானது. இப்படத்தினை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கினர்.

இந்நிலையில் தனது முதல் படத்தினை முன்னணி நடிகர்களுக்கு சமமாக பிரம்மாண்ட ரிலீஸ் செய்தார் சரவணன். ஆனாலும் இப்படம் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது. சரவணன் அண்ணாச்சியின் நடிப்பையும் பலரும் ட்ரோல் செய்தனர். ஆனாலும் அதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் சரவணன் அண்ணாச்சி.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து விட்டார் லெஜண்ட் சரவணன். அதன்படி அவரின் இரண்டாவது படத்தினை துரை செந்தில் குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது சூரி நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

துரை செந்தில் குமார் தனுஷின் கொடி, பட்டாஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூரி, சசிக்குமார் நடிப்பில் 'கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து தற்போது லெஜண்ட் சரவணனை வைத்து இவர் படம் இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.