நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் நடிகர் அசோக் செல்வன். இந்நிலையில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அதேநேரம் கடந்த வாரம் ரிலீஸாகவிருந்த அசோக் செல்வனின் சபா நாயகன் படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து நேற்று சபா நாயகன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அசோக் செல்வன் பதில் கூறினார்.

அதில், திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என கீர்த்தி பாண்டியன் பேசியிருந்தது குறித்து அசோக் செல்வனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை. கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து நடிப்பதில் எனக்கும் பிரச்சினை இல்லை என ஓபனாக பேசியிருந்தார்.

முன்னதாக கண்ணகி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடமும் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பதில் கூறியிருந்த கீர்த்தி பாண்டியன், நடிப்பும் ஒரு தொழில் தானே, இத மட்டும் கல்யாணம் ஆகிவிட்டால் நடிக்க கூடாதா? திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சினை. இதே கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா. ஆண்கள் திருமணம் செய்துவிட்டு நடிக்கலாம், ஆனால், நடிகைகளுக்கு மட்டும் என்ன பிரச்சினை என காட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.