கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்த படம் 'டிமான்ட்டி காலனி' படம். அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், சனத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

'டிமான்ட்டி காலனி' படம் வெளியாகி தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தினையும் அஜய் ஞானமுத்துவே இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது.

இதனையடுத்து தற்போது 'டிமான்ட்டி காலனி 2' படத்தினை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. அருள் நிதி, பிரிய பவானி சங்கர், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியுள்ளது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதில், ஒரு இரையை தவறவிட்ட மிருகத்திற்கு மட்டுமே அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம். ஆனால் கலைஞர் தோற்பதில்லை.

ஒவ்வொன்றையும் இந்தப்படத்தில் பார்த்து பார்த்து செய்துள்ளார் அஜய் ஞானமுத்து. இந்தப்படத்தில் வேலை செய்வதற்காக பல படங்களில் காமிட் ஆகவில்லை. கொஞ்சம் அது வருத்தம் தான். ஆனால் படத்தை பார்த்த போது அது மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக அஜய் இப்படத்தில் சிக்சர் அடிப்பார். மேலும் தயாரிப்பாளர் படத்தை பார்த்து பார்த்து தயாரித்துள்ளார்.

இப்படத்திற்காக டெக்னிஷியன் டீம் கடுமையாக உழைத்துள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிரட்டலாக வந்துள்ளது. நாங்களே படத்தை பார்த்து பயந்து விட்டோம். அந்தளவிற்கு படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு டிமான்ட்டி காலனி 2 படம் நிச்சயமாக புது அனுபவத்தை தரும் என தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் சாம். அண்மையில் இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.