கடந்த தீபாவளி வெளியீடாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ரிலீசான இப்படம் தான் இந்தாண்டு தீபாவளி வின்னர் ஆனது. இந்நிலையில் இப்படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் ஹாலிவுட் பிரபலம் நடிகரும், இயக்குனருமான கிளிண்ட் ஈஸ்ட்வுட் தொடர்பாக ஒரு சின்ன கதையை இடம்பெற செய்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அத்துடன் அனிமேஷன் மூலமாக அவர் தொடர்பாக காட்சியில் படத்தில் இடம்பெற்று இருந்தது. இதனிடையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இடம்பெற்றிருப்பது பற்றி குறிப்பிட்டு, படத்தை பார்க்கும் படி பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் சார்பாக ரசிகரின் பதிவிற்கு பதில் வந்துள்ளது. அதில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் பற்றி கிளிண்ட் அறிந்திருக்கிறார். தற்போது அவர் தனது புதிய படமான 'ஜுரி 2' வேளையில் இருப்பதால், அதனை நிறைவு செய்துவிட்டு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்ப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பதிவை பார்த்து உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பற்றி லெஜண்ட் கிளிண்ட் ஈஸ்ட்வுட் அறிந்திருப்பதுடன், விரைவில் படத்தை பார்க்க உள்ளதும் மிகுந்த நெகிழ்ச்சியாக உள்ளது. அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் இப்படம் என்னுடைய இதயபூர்வமன அர்ப்பணிப்பு. படம் பற்றி அவர் என்ன கூறுவார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறேன். இந்தப்படத்தை அவரிடம் கொண்டு சேர்ந்த ரசிகர்கருக்கு நன்றி'. இவ்வாறு தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.