கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவமனை சார்பாக கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவரது உடல்நிலை சீராக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும், பதட்டமும் அடைந்தனர். இதனையடுத்து கேப்டன் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரை பார்க்க வேண்டும் என தொண்டர்களும், ரசிகர்களும் பெரிதும் விரும்பினர்.

இதனையடுத்து கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து கேப்டனின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்படுவதாகவும், விரைவில் அவர் திரும்பி வருவார் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சூர்யா. அதில், 'அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும். அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்! இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா. அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனிடையில் கேப்டன் மருத்துவமனையில் இருப்பதை போன்று புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். மேலும், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகு விரைவில் வீடு திரும்ப இருக்கிறார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.