தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்து ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல நல்ல படங்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சினிமா ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த சேரனின் தந்தை எஸ். பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (16) அதிகாலை 6.30 மணியளவில் காலமானார். சொந்த ஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள பழையூர்பட்டியில் வாழ்ந்து வந்த சேரனின் தந்தை சொந்த ஊரிலேயே உயிரிழந்த நிலையில், இன்று மாலை அங்கேயே இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேரனின் தந்தை பாண்டியனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.