இலங்கை

அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

25ம் திகதியிடப்பட்ட கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச, பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திரசில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல் இராணுவதலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றதாகவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதோடு இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனீவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவை தெளிவுபடுத்த தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்க்பபட்டன எனவும் சரத்வீரசேகர, ஜனாதிபதி ரணிலுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.