தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா வாரிசு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது....

மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அழகுக்கு உதாரணமாக யாரையும் சொல்ல முடியாது. எல்லோரிடமும் ஒரு விதமான அழகு இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியின் முன்னால் நின்று என்னை நான் பார்த்துக் கொள்ளும்போது ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டால் போதும். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

சிலர் பருமனாக இருந்தால்தான் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடலின் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆறு மாதம் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். என்னை பொறுத்தவரை நான் ஒரு உடற்பயிற்சியாளரை நியமித்து இருக்கிறேன்.

அவரது ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடக்கிறேன். அதன் மூலம் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தை காப்பாற்றி வருகிறேன் என்றார்.