இந்தியா: தமிழ்நாடு

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பு சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வி தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக குஷ்பு அளித்த பேட்டியில் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் கூறியதாவது...

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.. பெண்ணா பையனா என்பதில் பிரச்சினை இல்லை.

என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்.

அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது.. எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

எங்கு நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது.

இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்தேன். அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.

அவர் எங்களை விட்டுச் சென்றார்.அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அப்போது அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன்.

குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது. குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது என்றார்.