தமிழ்நாடு

41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது என்று பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது...

தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த 03.08.2021 இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 ஆவது தற்கொலை இதுவாகும்.

கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது பெரும் சோகமாகும்.

தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும்! 41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது.

இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது மட்டுமன்றி நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களையும் ஆளுநர் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் என்பது திமுக, கூட்டணி கட்சிகள், பாமக உள்ளிட்டவற்றின் குற்றச்சாட்டாக உள்ளது.