தாய்வானை ஒரு சீன பிரதேசமாக சீனா கருதுகிறது.

அதுமட்டுமின்றி தேவை ஏற்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி தாய்வானை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது.

இத்தகைய சூழலில் தாய்வானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அண்மை காலமாக தைவானுடன் நட்பு பாராட்டி வருகின்றன.

நட்புறவை வலுப்படுத்தும் விதமாக அந்த நாடுகள் தங்களின் பிரதிநிதிகளை தாய்வானிற்கு அனுப்பி வருகின்றன. இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பை மீறி தாய்வானிற்கு சென்றார்.

இதனால் கோபம் அடைந்த சீனா தாய்வானை சுற்றி வளைத்து மிகப்பெரிய போர்ப்பயிற்சியை நடத்தியது.

இந்த சூழலில் அமெரிக்காவை தொடர்ந்து பல நாடுகளின் பிரதிநிதிகளும் தாய்வானிற்கு பயணம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் லூதியானா நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போது தாய்வான் சென்றுள்ளது.

இது குறித்து சீனாவின் தாய்வான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்...

"தாய்வான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது மற்றும் தைவான் சுதந்திரத்திற்கான சதிகளை அடித்து நொறுக்குவதில் சீனா இப்போதும் உறுதியாக உள்ளது. சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தாய்வானிற்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என கூறினார்.