புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது...

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதில் பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள் வசதிகள் உருவாக்கப்படும்.

அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023-க்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர் சட்டப்பேரவையில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்.

கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.

இதனிடையே நேற்று சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்த நிலையில், இன்று வழக்கமான வெள்ளை உடையில் வருகை தந்து பேரவையில் பங்கேற்றனர்.