தற்போதைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

அதன்படி சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது இராணுவத் தளபதியாக இருந்த தம்மிடம் வந்த அழுததாக தெரிவித்துள்ளார்.

 

இதன் பின்னர் தாமே வாகனம் ஒன்றையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

சரத் வீரசேகரவிற்கு, யுத்தம் பற்றி தெரியாது எனவும் அவர் துப்பாக்கிச் சூட்டு சத்தமொன்றைத்தானும் கேட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

சரத் வீரசேகர பாதுகாப்புப் பேரவை கூட்டங்களில் கூட ஒரு போதும் பங்கேற்றதில்லை அவருக்கு அந்த அனுமதியையும் தாம் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதற்கமைய 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 1ம் திகதி அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அறிவித்தது, இதனால் 300 படையினரை இழக்க நேரிட்டது எனவும் இதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எனினும், சரத் வீரசேகர யுத்த வெற்றியின் முழு கௌரவத்தையும் அரசியல் தலைமையிடம் சேர்க்க வேண்டுமென கூறுவதாகவும் இது பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சரத் வீரசேகரவை சிவில் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக நியமிப்பதற்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்க்ஷ தம்மிடம் நியமனம் குறித்து வினவியதாகவும் தாமே இந்த பதவிக்கு சரத் வீரசேகரவை பரிந்துரை செய்ததாகவும் ஏனேனில் அப்பொழுது அவருக்கு தொழில் இருக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

மேலும் ,பொதுப்பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போது அவரது புதல்வர் பொலிஸ் சீருடையில் இருந்தார் எனவும் அவர் ஒர் பொலிஸ் மருத்துவர் எனவும் அவருக்கு சீருடை அணிய தகுதியில்லை எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

யாரிடம் இந்த சீருடையை கடன் வாங்கினாரோ தெரியவில்லை என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.