நாட்டின் 16 மாவட்டங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினைகள் காணப்படுகின்றமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

 

அதன்படி ,நாட்டில் 4G தொழில்நுட்பம் செயற்படுத்தப்படும் வலயம் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்ற நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் தினங்களில் “கிராமத்திற்கு தொலைத்தொடர்பு” திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இத்துடன், தொலைத்தொடர்பு பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கோபுரங்களை ஸ்தாபிப்பதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 70 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் , கொரோனா தொற்று காரணமாக நாடு பூராகவும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, இணைய வழியூடாக கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்வதற்காக இலவச டேடாவை (Data) வழங்குவது குறித்து தாம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.