சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறாக சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இந்த நிலை தொடர்ந்தால், பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள 45 நகர்ப்புற நிலப்பரப்பில் ஆண்டிற்கு 3 மில்லிமீட்டர் வரை நீரில் மூழ்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது சீனாவில் உள்ள நகரங்களில் 900 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர். சிறிய அளவில் நில பற்றாக்குறை ஏற்பட்டாலும் நகர கட்டமைப்பில் கடுமையான நெருக்கடி வரும் என்று ஆய்வை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இயற்கைப் பேரிடர்களால் சீனா ஆண்டிற்கு 1 பில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்குகிறது. அடுத்த நூற்றாண்டில் சீனாவின் கடலோரப்பகுதியில் உள்ள கால் பங்கு இடங்கள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படலாம். இதனால் பல நெருக்கடிகளை சீனா சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடக்குப் பகுதியில் உள்ள டியாஞ்சின் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டியாஞ்சின் நகரத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர். இதேவேளை, உலகளாவிய ரீதியில் 44 கடலோர நகரங்கள் பாதிப்புகளை எதிர்நோக்குவதாகவும் அவற்றில் 30 ஆசியாவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.