நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தில் சூர்யாவின் போர்ஷன்கள் ஏறக்குறைய நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்திற்காக இணையவுள்ளார் சூர்யா. படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்கவுள்ள நிலையில் அதற்கான பிட்னசில் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்கள் இணையவுள்ளனர். படத்தின் சூட்டிங்கில் சூர்யா சற்று தாமதமாக இணைவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு முன்னதாக புறநானூறு என்று தலைப்பிடப்பட்டது.

ஆயினும் டைட்டில் அதுவல்ல என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் கடந்த 1965ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது. படத்தில் சூர்யாவுடன் துல்கர் மற்றும் நஸ்ரியா ஆகியோரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதைக்களம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக முன்னதாக சுதா கொங்கரா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். முன்னதாக சூர்யா -சுதா கொங்கரா இணைந்திருந்த சூரரைப் போற்று படத்தின் கதைக்களம் பயோபிக்காக வெளியாகி மாஸ் காட்டியது. தேசிய விருதுகளையும் அள்ளியது.