இலங்கை

இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் கடன்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரசபையை நிறுவுவதற்கு இலங்கை மத்திய வங்கி இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் தற்போது சட்ட வரைவு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலை காரணமாக பலர் கடன் வாங்கத் தூண்டப்படுகின்றனர்.

இணையம் மூலம் கடன் வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. முதல் கடன் தவணை இலவசம் என்று கடன் வழங்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

ஒரு வாடிக்கையாளர் தனது முதல் கடன் தொகையை செலுத்திய பிறகு அதிக பணம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனினும் அந்த கடன் தொகைக்கு 30 முதல் 40 சதவீதம் வட்டி அறவிடப்படுகிறது

இந்நிலையில் பொருளாதாரச் சிக்கல்களால் இணையத்தினூடாக கடன் பெற்ற ஏராளமானோர் பணத்தைச் செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இவ்வாறு கடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உரிய சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.