கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களில் மிக மோசமாக நஷ்டமடைந்து வருகின்றனர். இதற்கிடையே கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளைச் சம்பாதித்த அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இவர் மாயமான நிலையில், கடந்த புதன்கிழமை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகே ஒரு சூட்கேஸில் அல்கபாவின் உடல் பாகங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தான் முதலில் இந்த சூட்கேஸை கவனித்துள்ளனர். அதை ஆர்வ மிகுதியில் அவர்கள் திறந்த நிலையில், உள்ளே முழுக்க உடல் உறுப்புகள் இருந்துள்ளன. இதனால் அச்சமடைந்த அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் பின்னரே இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவரது ஒரு கை அருகில் இருந்த ஒரு நீர்நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பெரெஸ் அல்காபாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டும் முன்பு அவரது தலையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடல் உறுப்புகள் தனித்தனியாக வெட்டப்பட்ட போதிலும், அவரது கைரேகை மற்றும் உடலில் இருந்த டாட்டூ மூலம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர்.

கிரிப்டோவில் முதலீடு செய்து பல கோடி சம்பாதித்த பெரெஸ் அல்காபா பார்சிலோனாவில் தான் முதலில் இருந்துள்ளார். அதன் பின்னர் சில காரணங்களுக்காக அங்கிருந்து அவர், அமெரிக்காவின் மியாமியில் குடியேறியுள்ளார்.

இதற்கிடையே ஒரு வேலை காரணமாக அவர் அர்ஜென்டினா வந்த நிலையில், அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கிரிப்டோகரன்சி முதலீடு மட்டுமின்றி சொகுசு வாகனங்களை வாடகைக்கு விடுவது, இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலமும் இவர் பணத்தைக் குவித்துள்ளார். இருப்பினும் ஆடம்பர வாழ்க்கையால் இவர் பலரிடம் இருந்து பெருந்தொகையைக் கடனாக வாங்கியுள்ளார்.

கிரிப்டோகரன்சி சரிந்ததால் கடனை கட்ட முடியாமல் இவர் திணறி வந்த நிலையில், கடன் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.