இந்தியா: தமிழ்நாடு

'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் பாதயாத்திரை தொடங்கியுள்ளார்.

இதன்மூலம் 234 தொகுதிகளிலும் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த பாதயாத்திரை பயணத்தின் தொடக்கவிழா ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பாதயாத்திரை துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று அண்ணாமலையின் நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவில் பங்கேற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை அனுப்பி வைத்து இருந்தார்.

இந்நிலையில் ஆர்.பி உதயகுமார், அண்ணாமலையின் பாத யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது...

சர்தார் வல்லபாய் படேலை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வரலாற்றிலே படித்து இருக்கிறோம். அதே கொள்கையோடு, லட்சியத்தோடும் இன்றைக்கும் வாழும் இரும்பு மனிதராக இருக்கும் அமித்ஷா இங்கு வருகை தந்து இருக்கிறார். இரும்பு மனிதர், கரும்பு மனிதராக இருக்கும் அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதை வாழ்த்துவதற்காக சாமானியமானவனாக வந்து இருக்கிறேன். கிளைக்கழக செயலாளராக இருந்து 2 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்கும் தமிழ்நாட்டின் இரும்பு மனிதராக இருக்கும் தி அயர்ன் மேன் ஆப் தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்து இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.